Tuesday, March 11, 2025

அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

ராணியாக  நினைத்த அம்மாவிடம் இருந்து ஒரு பெண் குழந்தை விலகிய தருணத்தையும், அதற்கான சமூகச் சூழலையும் சிறப்பாகக் காட்டுகிறது இந்தக் கதை.


1971 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதையென்றாலும் பெரும்பாலான இடங்களில் இன்றையச் சூழலுக்கும் பொருந்தும் உணர்வுப்பூர்வமான கதை அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’  சிறுகதை. இந்தக் கதை பதின்மூன்று வயது பெண்குழந்தை வயதிற்கு வரும்பொழுது எழும் மெல்லிய உணர்வுகளையும், பெண் குழந்தைகள் என்றாலே கல்யாணம் செய்து தர வேண்டும் என்ற பெற்றோரின் பயமும், அதிலும் பெண் கருப்பு நிறத்திலிருந்தால் கல்யாணத்திற்குத் துணை தேடும் பொழுது சமூகத்தில் வரும் சிக்கல்களையும்  சுட்டிக் காட்டுகிறது. 


அம்மா தான் ராணி. அசுத்தங்களை எரிக்கும் ராணி. அவள் சிரிப்பு,பேச்சு என ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்து வளர்கிறாள் அவள். பயம் நிறைந்து ஒரு தருணத்தில் அம்மாவின் ஒரு சொல்லுக்காகவும், மடியில் படுப்பதற்கும் ஏங்கிக் கொண்டிருந்த அவளைச் சுடு சொற்களால் புதைத்து விடுகிறாள் அம்மா. அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து அம்மாவின் அத்தனை அழகையும் அழிக்கிறதாக உணர்கிறாள்.பெண் குழந்தைகள் கருப்பாக இருந்தால் சந்திக்கும் சங்கடங்களை இந்தக் கதையில் காணலாம்.  அம்மா அவளின் குழந்தைத்தனத்தைக் கொன்று விட்டாள். அம்மாவின் பிம்பத்தைக் கொலை செய்து விட்டாள். 






குழந்தையின் மெல்லிய உணர்வுகளை இந்தச் சமூகம் வீட்டிலும், பள்ளிகளிலும், பொது இடங்களிலும் சுடு சொற்களால் சுட்டு எரிப்பது வழக்கமான ஒன்று தான். குத்திப் பேசுவதையும், பாகுபாடு பார்ப்பதையும் சர்வ சாதாரணமாக நிகழ்த்தி வருகிறது.  சமூகத்தால் குழந்தைகளின் பெரும் மனவலியை, ரணத்தை உணர முடியாமல் போய் விடுகிறது. பயமும் கேள்வியும் நிறைந்து ஆதரவைத் தேடும் குழந்தையை அரவணைத்துப் பேசிப் பழக்கமில்லை. 


அம்மா என்பவள் பெண் குழந்தைகளுக்கு ராணி. அம்மா தெய்வம். அம்மாவே முன் மாதிரி. அவள் அழகை, பேச்சை, புன்னகையை, தைரியத்தை , அன்பைப் பெண் குழந்தைகள் சிலாகிப்பார்கள். அனைத்தும் அம்மாவாகத் தான் இருக்கும்.  பெண்ணின் உணர்வை பூப்போல கையாளாகாமல் விட்டால், அது மாறி விட வாய்ப்புகள் அதிகம். 


அம்மாவும் ஒரு பெண். தன் மனப்போராட்டம், சமூகக் கட்டமைப்பு, குடும்பச் சூழல் என்ற பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் பெண். ஆனாலும், பெற்றோராக சமூகத்தையும் தாண்டி, தங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இந்தக் கதையில் தெளிவுறுகிறது.  


அம்மா கொலையும் செய்வாள்,  ஒப்பில்லா அன்பும் தருவாள்.


No comments:

Post a Comment

சிறுகதை: நிலை - எழுத்தாளர் வண்ணதாசன்

ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை! ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப்...