Monday, November 14, 2022

செல்லாத பணம் - புதினம்

 நல்ல கல்வியறிவு நிறைந்த குடும்பத்தில் பிறந்து, படிப்போடு சிந்தனையையும் வளர்த்து, தன் வாழ்க்கையை நன்றாகச் செதுக்கும் வாய்ப்பிருந்தும் சில பெண்கள் தவறவிட்டுவிடுகின்றனர். வாழ்க்கைக் குறித்தான அக்கறையும் தெளிவுமின்றி எடுக்கப்படும் பிடிவாதமான முடிவுகள் ஒவ்வொன்றும் ஒட்டு மொத்த வாழ்க்கையின் உயர்வு வீழ்விற்கு வழி வகுக்கும். பணம் எவ்வளவு இருந்தாலும் உதவாமல் போய் விடும்.


அந்த வகையில், எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் புதினத்தில் (நாவல்), ஒவ்வொரு கதாபாத்திரங்களோடும் நம்மை மூழ்க வைத்து, சிறந்ததொரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறார்.

இன்ஜினியரிங் படித்த ரேவதி ஆட்டோ ஓட்டும் அகதி ரவியைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறாள். எத்தனை முயன்றும் மகளின் மனதை மாற்ற முடியாமல் கல்யாணம் செய்து வைத்து ஒதுங்கி நிற்கின்றது குடும்பம்.

ரவி தண்ணியடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்துவதும், பணப்பற்றாக்குறையும், அவள் இயல்பில் இருக்க விடாமல் வேலைக்குச் செல்வதைக்கூட தடுப்பதும், இரண்டு குழந்தைகளுக்குப் பிறகும் தாழ்வு மனப்பான்மையினால் சந்தேகப்பட்டு வீட்டினுள் அடைத்துப் பூட்டி வைத்துவிட்டு வெளியே செல்வதுமாக ஓடிக்கொண்டிருக்கும் மோசமான வாழ்க்கையில் ஒரு நாள் தீ விபத்துக்குள்ளாகி(விபத்து?!) மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.

இங்குத் தொடங்குகின்றது வாசிப்பவர்களின் தவிப்பு. ஏன் இத்தனைக்கும் பிறகு அங்கிருந்து முட்டாள்தனமாகத் தன்னை வருத்திக்கொண்டு இந்த நிலைக்கு ஆளானாள்? அமைதியையும் நல்வாழ்க்கையையும் தராத ஓர் உறவு தேவைப்படுவதற்கான காரணம் அப்படி என்னவாக இருந்திருக்கும் என்ற கோபக் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

தீக்காயத்தில் தன் மகளைக் கண்டு மயங்கி விழும் அம்மாவிடம், ‘நான் நலம் பெற்று திரும்பி வந்து அந்த வேலைக்குப் போகனும் அம்மா’ என்று உயிருக்காகப் போராடும் ரேவதி தான் செய்த தவறையெல்லாம் திருத்திக் கொள்வதுபோல் கூறுவது அழ வைத்து விட்டது. அவள் பேசுவது மற்றவர்கள் செவியில் விழாமல் அவளோடு நின்று விடுவது பெருந்துயராக இருந்தது.

அம்மா, அப்பா, அண்ணா என அனைவருடனும் மருத்துவமனையில் நகரும் ஒவ்வொரு நொடிகளின் பதட்டமும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் ‘எப்படியாவது காப்பற்றிவிடுங்கள்" என்ற போராட்டமும், திரு.இமையம் அவர்களின் எளிமையான வழக்கு மொழி நடையும் நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. தொடர்ந்து புத்தகத்தைப் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை.

இமையம் அவர்களுடன் என் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து உரையாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி.



#செல்லாதபணம் #புதினம்


Monday, November 7, 2022

நட்பு என்ன செய்து விடும்?

 நட்பு என்ன செய்து விடும்?

 

#கபிலர்வேள்பாரி 

 

நாம் மகிழ்ச்சியாகச் சிரித்து மகிழ நல்ல நட்பு வேண்டும்.  அதற்கு மட்டுமா?

 

வாழ்வில் மிக உன்னதமானது நட்பு. வாழ்க்கை சட்டென்று  எதிர்பாராததை எதிர்பாராத நேரத்தில் வழங்கி, திசை தெரியாமல் விழி பிதுங்கி நிற்க வைக்கும்போது நம்மை வழிகாட்ட நிச்சயம்  நட்பே தோள் கொக்கும். இதெல்லாம் கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கின்றது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. கடினமான காலத்தில் விட்டுச் சென்றவர்கள் நண்பர்கள் தான். உதவி செய்ய முன் வராததோடு மட்டுமல்லாமல் முதுகில் குத்திச் சென்றவர்களும் நண்பர்கள் தான் என்று நினைக்கலாம். 

 

ஆனால், பொதுவாக மனம் ஆயிரம் நல்லது நடந்து இருந்தாலும், ஒரு சிறு குறையை மட்டுமே அசை போட்டுக் கொண்டேயிருக்கும். உணர்வுகளை ஒருபுறம் தள்ளி விட்டு, நன்றாக சிந்தித்துப் பார்த்தால், நம் கடின காலத்தில் நாம் எதிர்ப்பார்க்காத இடத்திலிருந்து நமக்கு உதவி வந்து புதிய  நட்பு கூட உருவாகி இருக்கும் .

 

திருவள்ளுவர், நட்பு உறவைப் போல் செயற்கரிய செயல் ஏதுமில்லை, அதுபோல் பாதுகாப்பான செயலும் ஏதுமில்லை என்கிறார். 

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 

வினைக்கரிய யாவுள காப்பு.

 

நட்பின் பெருமையை சங்க இலக்கியங்களில் பல இடங்களில் நாம் காணலாம். யாவரும் அறிந்த கபிலர் - பாரி நட்பே அதற்கு ஓர் உதாரணம் எனலாம்.

 

கபிலர் ஆடுவதிலும் பாடுவதிலும் வல்லவர்களான விறலியர்களிடம் தன் நண்பர் வேள்பாரியிடம்  சென்று  பாட்டுப் பாடி பரிசு பெறுமாறு கூறுகின்றார்.  வேள் பாரியை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு, பெருமிதத்துடன் தன் நண்பரிடம் செல்லுமாறு சொல்லும் கபிலர்,  வேள் பாரியை எவ்வளவு இனிமையாயனவராகக்  குறிப்பிடுகிறார் இந்தப் புறநானூற்றுப் பாடலில் என்று பார்க்கலாம் .

 

ஒளி பொருந்திய நெற்றியை உடைய விறலியரே,  பெரிய சுனையில் செழித்துப் பெரிய இதழுடைய குவளை மலர்கள் மலர்ந்திருக்க, வண்டுகள் மொய்க்கும் புத்தம் புது மலர்களின் மேல்  குளிர்ந்த நீர்த்துளி சிதறிக் கலக்க - என்று ஊரின் வளத்தைக் குறிப்பிட்டுவிட்டு  ,

 

அடுத்து , அங்கே மழை பெய்தாலும் , பெய்யாமல் போனாலும், நீர் அருவிகள் வழியாக, கொள் பயிரிடுவதற்காக உழுத பரந்த நிலத்தில் வாய்க்கலாக ஒடி, பறம்பு மலையின் மூங்கில் ஏணிகள் உடைய நெடிய மலைச் சிகரங்களிலிருந்து வந்து கொண்டே இருக்கும் என்று குன்றாத நீர்வளத்தைக் கூறி,  

 

 

அந்த  நீரை விட இனிய தன்மையுடையவன் பாரி என்று அழகாக நம் கண்முன் இயற்கையைக் காட்சிப்படுத்தி வேள் பாரி அதையும் விட பெருமைக்குறியவர் என்பதை உணர வைத்து, அப்படிப்பட்ட வேள்பாரியிடம் நீ பாடிச் சென்றால், சிவந்த பொன் நிறமுடைய அணிகலன்களைப் பெறலாம் என்கிறார் கபிலர்.

 

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி,

தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை

வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்,

பெய்யினும்,  பெய்யாது ஆயினும், அருவி

கொள் உழு வியன் புலத்து  உழைகால் ஆக  5

மால்பு உடை நெடு வரைக் கோடு தொறு இழிதரும்

நீரினும் இனிய சாயல்

பாரி வேள்பால், பாடினை செலினே.

புறநானூறு 105, பாடியவர் –  கபிலர், பாடப்பட்டோன் – வேள் பாரி,

 

 

நட்பிற்கு  இந்த ஒரு பாடல் மட்டும் தானா?! 

 

தொடரும் நட்பு…

 

#கபிலர்வேள்பாரி #சங்கஇலக்கியம் #நட்பு




சிறுகதை: நிலை - எழுத்தாளர் வண்ணதாசன்

ஒரு தேர்த் திருவிழா… ஒரு குழந்தை தொழிலாளி… இரண்டும் பேசும் உண்மை! ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப்...