நல்ல கல்வியறிவு நிறைந்த குடும்பத்தில் பிறந்து, படிப்போடு சிந்தனையையும் வளர்த்து, தன் வாழ்க்கையை நன்றாகச் செதுக்கும் வாய்ப்பிருந்தும் சில பெண்கள் தவறவிட்டுவிடுகின்றனர். வாழ்க்கைக் குறித்தான அக்கறையும் தெளிவுமின்றி எடுக்கப்படும் பிடிவாதமான முடிவுகள் ஒவ்வொன்றும் ஒட்டு மொத்த வாழ்க்கையின் உயர்வு வீழ்விற்கு வழி வகுக்கும். பணம் எவ்வளவு இருந்தாலும் உதவாமல் போய் விடும்.
அந்த வகையில், எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் புதினத்தில் (நாவல்), ஒவ்வொரு கதாபாத்திரங்களோடும் நம்மை மூழ்க வைத்து, சிறந்ததொரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறார்.
இன்ஜினியரிங் படித்த ரேவதி ஆட்டோ ஓட்டும் அகதி ரவியைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறாள். எத்தனை முயன்றும் மகளின் மனதை மாற்ற முடியாமல் கல்யாணம் செய்து வைத்து ஒதுங்கி நிற்கின்றது குடும்பம்.
ரவி தண்ணியடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்துவதும், பணப்பற்றாக்குறையும், அவள் இயல்பில் இருக்க விடாமல் வேலைக்குச் செல்வதைக்கூட தடுப்பதும், இரண்டு குழந்தைகளுக்குப் பிறகும் தாழ்வு மனப்பான்மையினால் சந்தேகப்பட்டு வீட்டினுள் அடைத்துப் பூட்டி வைத்துவிட்டு வெளியே செல்வதுமாக ஓடிக்கொண்டிருக்கும் மோசமான வாழ்க்கையில் ஒரு நாள் தீ விபத்துக்குள்ளாகி(விபத்து?!) மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.
இங்குத் தொடங்குகின்றது வாசிப்பவர்களின் தவிப்பு. ஏன் இத்தனைக்கும் பிறகு அங்கிருந்து முட்டாள்தனமாகத் தன்னை வருத்திக்கொண்டு இந்த நிலைக்கு ஆளானாள்? அமைதியையும் நல்வாழ்க்கையையும் தராத ஓர் உறவு தேவைப்படுவதற்கான காரணம் அப்படி என்னவாக இருந்திருக்கும் என்ற கோபக் கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
தீக்காயத்தில் தன் மகளைக் கண்டு மயங்கி விழும் அம்மாவிடம், ‘நான் நலம் பெற்று திரும்பி வந்து அந்த வேலைக்குப் போகனும் அம்மா’ என்று உயிருக்காகப் போராடும் ரேவதி தான் செய்த தவறையெல்லாம் திருத்திக் கொள்வதுபோல் கூறுவது அழ வைத்து விட்டது. அவள் பேசுவது மற்றவர்கள் செவியில் விழாமல் அவளோடு நின்று விடுவது பெருந்துயராக இருந்தது.
அம்மா, அப்பா, அண்ணா என அனைவருடனும் மருத்துவமனையில் நகரும் ஒவ்வொரு நொடிகளின் பதட்டமும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் ‘எப்படியாவது காப்பற்றிவிடுங்கள்" என்ற போராட்டமும், திரு.இமையம் அவர்களின் எளிமையான வழக்கு மொழி நடையும் நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. தொடர்ந்து புத்தகத்தைப் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை.
இமையம் அவர்களுடன் என் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து உரையாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
#செல்லாதபணம் #புதினம்

No comments:
Post a Comment