ஒரு தேர்த்திருவிழாவின் வழியே, ஒரு பன்னிரெண்டு வயது சிறுமியின் வாழ்க்கையைப் பார்க்க நேரிட்டது. கோமு என்ற குழந்தை தொழிலாளர்,. வீட்டு வேலைக்காக ஒரு குடும்பத்தில் தங்கி இருக்கிறாள்.
அவளது அப்பா, அவருக்கு உணவு தேவைப்படும்பொழு மகளைக் காண வருகிறார். சாப்பிடுகிறார் போய் வருகிறேன் என்று சொல்லாமலே போய்விடுகிறார். இந்தக் குடும்பத்தின் உச்சகட்ட வறுமையின் தாக்கத்தை இந்த வரிகளில் உணர முடிகிறது.
தேர்த்திருவிழாவிற்கு எல்லாரும் சென்ற பின், அந்தச் சின்னப் பெண் தனியாக இருக்கையில், “இன்றைக்கு அப்பா வந்தா நல்லா இருக்கும்…” என்று நினைப்பது மனதை பிசைகிறது. மூன்று வேளை சாப்பாடு, தங்கும் இடம், இதற்காக ஒரு குழந்தை தன் பெற்றோரை விட்டு யாரோ ஒருவர் வீட்டில் தொழிலாளியாக வாழ்கிறாள்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டம், குழந்தைகளின் பசியைத் தீர்த்து கல்வியின் பக்கம் இழுத்து சமுதாயத்தின் பெரும் மாற்றத்தை உருவாக்கியதை மனம் அசை போடுகிறது.
குழந்தை தொழிலாளிகள் தடை விதிப்புச் சட்டமும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்ததை நினைவு கூர்ந்தது இந்தக் கதை.
இந்தக் கதை இவ்வளவில் முடிந்துவிடவில்லை.
தேர் விழாவிற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செல்லும் போது, கோமுவை வீட்டு வேலையையும், வயதான பாட்டியைப் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு செல்கிறார்கள். பாட்டி தொடர்ந்து கேள்வி கேட்டு நச்சரிப்பவள். முதலில் பாட்டியிடம் பேசாமல் வெளியில் சென்று தெருவை வேடிக்கை பார்த்தவள், பின் இருளில் கவலையும் தனிமையும் தாக்க பாட்டியிடம் பேச சென்றதில் அந்தச் சின்னப் பெண்ணின் கவலை புரிந்தது.
‘உன்னை விட்டுப் போயிட்டாங்களா? நீயும் போ…” என்ற பாட்டியின் வார்த்தைகள் ஆறுதல் தர, அன்புடன், “சுடு தண்ணி வேணுமா?” என்பதும் கால் பிடித்து விடுவதுமாக இருக்கும் அந்தப்பெண் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்குவதை காண முடிகிறது.
நமது நிலையைப் புரிந்துகொண்டு நமக்கு ஆறுதலாக இருப்பவர்கள் மேல் நமக்கு பல மடங்கு அன்பு பிறந்து விடுகிறது என்பதைக் காணலாம். அன்பு செய்து அன்பைப் பெறலாம்.
தேர் பார்த்து விட்டு வந்தவர்கள், வீட்டிற்குள் வந்ததும் ‘தண்ணி பிடிச்சு முடிச்சாச்சா’ என்று ஒவ்வொரு கேள்விகளாய் அடுக்கி, பின் அந்தப் பெண்ணை கடைக்கு வெளியில் செல்ல வைக்கிறார்கள். அவள் வெளியே செல்லும் பொழுது தேரைப் பார்த்து, அதை இழுக்க அவளுக்கு ஆசை. தேரும் அந்த இடத்தை விட்டு நகர ஆவலாக இருந்தது. ஆனால் அவள் தேரை நிலையாக விட்டு விட்டு நகர்கிறாள்.
இந்தக் கதையின் முடிவு கோமுவின் வாழ்க்கையும் சிந்திக்க வைத்து மனக்கணத்தை அளித்தது.
சுபா காரைக்குடி










